சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்க்கும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் விருப்பம் போல உயர்த்தி வரும் நிலையில், அதை தடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, அதன் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கொள்கைப்படி தனியார் நிறுவனங்களில் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க உழவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து, விற்பனையை அதிகரித்தால் பால் சந்தையில் 50 விழுக்காட்டை ஆவின் நிறுவனத்தால் கைப்பற்ற முடியும். அத்தகைய வலிமையான நிலைக்கு ஆவின் உயர்ந்தால் தான் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் விலைக் கொள்ளையை தடுக்க முடியும்.
மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் பேசி பால்விலை உயர்வை திரும்பப் பெற செய்ய வேண்டும். மக்கள் நலனை அடகு வைத்து விட்டு, தனியார் நிறுவனங்களுக்கு துணை போகும் தி.மு.க.வை மக்கள் தண்டிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.