திருப்பூா்:
திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பகுதியில் காரில் 2 இளம்பெண்களை கடத்திச் செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவிநாசி சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் வதந்தி என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியை காட்டியுள்ளது.
இதைத்தொடா்ந்து, போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த ஓட்டல் தொழிலாளி செந்தில்முருகன் (வயது 42) என்பவா் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணைக்காக அனுப்பா்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதன் பின்னா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.