தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏ க்களில், அதிமுக-வின் சி.வி. சண்முகத்தைத் தவிர மற்ற 232 எம்.எல்.ஏ-க்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 232 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்ற நிலையில், சட்டமன்றத்திற்குத் தனியாக வந்த சி.வி. சண்முகம், பதவிப் பிரமாணத்தின் போது அவையில் இல்லை. அவரது பெயர் அழைக்கப்பட்ட போது அவர் வரவில்லை.
மாறாக அவை நடவடிக்கைகள் முடிந்த நிலையில், சி.வி. சண்முகம் சோழவந்தான் கருப்பையாவை அவரது அறையிலேயே சந்தித்தார்.
அங்கு முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பொது அவையில் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பதவியேற்பதைத் தவிர்த்து, தனி அறையை அவர் தேர்ந்தெடுத்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்னதாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அவைக்கு வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவும் வந்தன.
மேலும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழுத்தலைவராக செயல்பட ஆதரவு தெரிவித்து அதிமுகவின் 17 எம்.எல்.ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.
இதனால் அதிமுக மீண்டும் உடைகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் இந்த அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே சட்டப்பேரவையில் இருந்து வெளியேவந்த இபிஎஸ் இடம் அதிமுக உடைகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, தவறான செய்தி என சிரித்துக்கொண்டே சென்றார்.