தமிழக செய்திகள்

TN Assembly Election| ஊட்டி தொகுதியை பா.ஜ.க.வுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு: ஊட்டி கட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி தொகுதியை அ.தி.மு.க.வுக்கே ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மாலை மலர்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் என 3 தொகுதிகள் உள்ளது. இதில் ஊட்டி தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வும், குன்னூர், கூடலூரில் அ.தி.மு.க.வும் போட்டியிட்டது.

தேர்தல் முடிவில் கூடலூரில் மட்டும் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்ற குன்னூர், ஊட்டி தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது.

இதனால் இந்த முறை ஊட்டி தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் திடீரென ஊட்டி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் பா.ஜ.கவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி தொகுதி ஒதுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அ.தி.மு.க அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டி தொகுதியை அ.தி.மு.க.வுக்கே ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் கட்சியின் இந்த முடிவை பரிசீலனை செய்யக்கோரி, மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியை சந்திக்கவும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.