சென்னை:
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கடந்த 13-ந்தேதி புறப்பட்ட அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் அவர்களுக்கான பெட்டியில் ஏற முயன்றார்.
அப்போது பணியில் இருந்த கார்டு அவரை ஏற்றுவதற்கு மறுத்தார். ரெயில்வே நிர்வாகம் இன்னும் அனுமதி அளிக்காததால் பயணம் செய்ய முடியாது என்று கூறினார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு ரெயில்களில் முன்பதிவு அல்லாத பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் என்ஜின் பகுதியில் பின்புறமும், கார்டு இருக்கும் கடைசி பெட்டியிலும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஆனால் அனந்தபுரி எக்ஸ்பிரசில் பணியில் இருந்த கார்டு எதற்காக அப்படி செய்தார் என்று துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்த கார்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய சென்னை ரெயில்வே கோட்டம் உரிய ஏற்பாடு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.