கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது45).
இவரது மனைவி திம்மக்கா. கூலி வேலை செய்து வரும் சாக்கப்பாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சாக்கப்பா இன்று விருப்பாச்சி நகரிலிருந்து சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாக்கப்பாவை தாக்கி உள்ளது.
இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.
பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து ஓசூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிகிரிப் பள்ளி பகுதியில் ஒற்றை காட்டு யானையும் சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.