தமிழக செய்திகள்

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவால் 9 பேர் உயிரிழப்பு - ஆளுநர் அர்லேகர் இரங்கல்!

74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு தற்போதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான அம்மோனியா வாயு கசிவு விபத்தில், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதும், பல தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ள சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.

இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான மனவலிமையும், தைரியமும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.

மேலும், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.