நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.
இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.