கைது 
தமிழக செய்திகள்

சென்னை போராட்டத்துக்காக சேலத்தில் இருந்து புறப்பட்ட சத்துணவு ஊழியர்கள் 74 பேர் கைது

சேலத்தில் இருந்து சத்துணவு பணியாளர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

சேலம்:

சத்துணவு பொறுப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சமையல் உதவியாளர்ககளுக்கு தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பேறுகால விடுப்பு பணி 12 மாதமாக வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பெருந்திரள் போராட்டம் நடக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சத்துணவு பணியாளர்கள் சென்றனர். சேலத்தில் இருந்து சத்துணவு பணியாளர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 74 பேரையும் அம்மாபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர். போலீசாரின் இந்த கைது நடவடிக்கையால் சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT