தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
ஒரு மாதத்திற்குப் பின்பு, இலங்கை நீதிமன்றம் அவர்களில் 3 மீனவர்களை, விடுதலை செய்தது. ஒரு மீனவர் 2-வது முறையாக, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்ய ப்பட்டிருந்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் அந்த மீனவர் கடந்த 17-ந் தேதி விடுதலை செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மே மாதம் 10-ந் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்திய அரசின் அறிவுறுத்தறையின் பெயரில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்பு கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விமானம் மூலம், 7 மீனவர்களையும், நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் 7 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.