ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் 64 விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர்.
அடுத்த மாதம் தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் பிரதானமான உழவர்களின் கோரிக்கை மற்றும் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட தி.மு.க. தலைவர் உதவ வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பின்னர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி வெ.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தவும் காவிரியின் உரிமை பங்கு நீரை பெறுவதற்கு உதவ வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடன் அனைத்தையும் முழுமையாக அரசு தள்ளுபடி செய்வதற்கு உதவ வேண்டும், கட்டுப்படியாகாத செலவினங்களை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி குவிண்டாலுக்கு ரூ.3500 ஆதரவு விலை கிடைப்பதற்கும், பயிர்சாகு படியை ஊக்குவிக்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்குவிப்பு நிதி வழங்கிட வேண்டும், வேளாண்மை துறையின் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை அரசாணைப்படி முழுமையாக செயல்படுத்தி ஒரு குடையின்கீழ் கொண்டுவர உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய சங்கத் தலைவர் கோவிந்த ராஜ் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர தி.மு.க. தலைவர் வலுவான குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு என்றும் தி.மு.க. பக்கபலமாக இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.