தமிழக செய்திகள்

கேர்மாளம் அருகே 3-வது நாளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 50 மலை கிராம மக்கள்

மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வந்தது.

நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டு வந்தனர்.

மூன்றாவது நாளாக இன்றும் மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி, சுஜில் கரை, கோட்டமாளம், பூதாளபுரம், தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT