தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 6 தொகுதிகள் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனைத்தொடர்ந்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக வழங்க முன்வந்த 5 தொகுதிகளை ஏற்க அக்கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்தது.

இதனைத்தொடர்ந்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் பெ.சண்முகம்,

“திமுக கூட்டணியில் அதிகமாககவும், புதிதாகவும் கட்சிகள் சேர்ந்த சூழலில் நாங்கள் கேட்கும் கூடுதல் தொகுதிகளை தரமுடியாத சூழல் உள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

6க்கு பதிலாக 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எந்தவகையிலும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதற்காக 5 தொகுதிகளை ஏற்கிறோம்” என தெரிவித்தார்.

கடந்தமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளில் போட்டியிட்டது.