4-ந்தேதி...
எப்படி இருக்கும்? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பிலும், பரபரப்பிலும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் மூழ்கி இருக்கிறது.
அதே நாளில்தான் வெயிலும் தனது உச்சபட்ச காட்சியை வெளிப்படுத்த போகிறது. அதாவது அன்று தான் அக்னி வெயில் காலம் தொடங்குகிறது. அன்று முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களும் தமிழக மக்கள் நித்திய கண்டம் போலவே ஒவ்வொரு நாளையும் கடந்து செல்ல வேண்டும்.
இந்த காலத்தில் சூரியன் பூமிக்கு நேர்கோட்டில் இருப்பதால் அது உமிழும் வெப்பத்தின் தாக்கம் நிலப்பரப்பில் சும்மா தகிக்கும். ஏற்கனவே 100 டிகிரிக்கும் மேல் பல இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி காலத்தில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வெப்ப அலைகளும் 6 முறை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கால நிலை மற்றும் ஜோதிட கணிப்பின்படி சூரியன், பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதம் முதல் ரோகிணி நட்சத்திரத்தின் 2-ம் பாகம் வரை இந்த அக்னி காலம் இருக்கும். இந்த கால கட்டத்தில் நிலப்பரப்பில் வெப்பம் அதிகமாக இருக்கும். நீர்நிலைகளும் வறண்டு போனதால் கால நிலைப் பற்றிய கணக்கீட்டில் பண்டைய காலத்தில் இந்த காலத்தை தனியாக குறிப்பிடத் தொடங்கினார்கள். அப்படித்தான் அக்னி வெயில் காலம் புழக்கத்தில் வந்தது.
அதைதான் அக்னி வெயில், கத்ரி வெயில் என்று இன்றளவும் பேசுகிறோம். இந்த கடுமையான வெப்ப காலத்தில் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியம் இல்லாமல் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கையாக இருந்தால் இந்த கால கட்டத்தையும் நாம் எளிதாக கடந்து செல்ல முடியும். இந்த கால கட்டத்தில் தான் மனித உடல் வெப்பத்தை தாங்க முடியாமல் வெப்ப வாதம் என்ற நோய்க்கு ஆளாகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை 7,192 பேர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிர் இழந்தார்கள்.
2024-ம் ஆண்டு நாடு முழுவதும் 48 ஆயிரம் பேர் வெப்பவாத தாக்கத்திற்கு ஆளானார்கள். இதில் 159 பேர் பலியானார்கள். அதே ஆண்டு பாராளுமன்ற தேர்தல் கால கட்டத்தில் அதாவது மார்ச் முதல் மே மாதத்திற்கு இடையே மட்டும் சுமார் 24 ஆயிரம் பேர் வெப்ப அலையின் கோர தாக்குதலுக்கு ஆளானார்கள்.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையின் தாக்கத்தாலும், வெப்ப வாதத்தின் தாக்கத்தாலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் மக்களை பாதுகாக்க அரசாங்கங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டிலும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெப்பவாதத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஓ.ஆர்.எஸ். கரைசல் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தேவைப்படுபவர்கள் இலவசமாகவே பெற்று கொள்ளலாம். நீர்சத்தை உடனடியாக உடலில் ஏற்றிக் கொள்ள இந்த கரைசல் கை கொடுக்கும்.
இது வந்தபின் காப்பதற்கான நடவடிக்கைகள். ஆனால் வரும்முன் காப்பதே சமயோசிதம். அதன்படி அக்னி காலத்தில் முன்னெச்சரிக்கையோடு நமது பழக்க வழக்கங்களை மாற்றி கொள்வது நல்லது.
தேர்தல் முடிவு ஒரு சாரார் எதிர்பார்த்ததாக இருக்கும். ஒரு சாரார் எதிர்பாராததாக இருக்கும். எதுவாக இருந்தாலும் அது நம் கைகளால் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் அக்னி வெயில் இயற்கையின் கைகளில் இருக்கிறது. நமது முடிவை நாம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இயற்கை அப்படி அல்ல. அது என்ன வேண்டுமானாலும் செய்யும்.
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் சந்தித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வோம். அதே போல் 24 நாட்கள் இருக்க போகும் அக்னி வெயிலையும் சந்தித்து கடக்க தயாராவோம்.