சிறப்பு பஸ்கள் 
தமிழக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள்

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி வியாழக்கிழமை (இன்று) 910 பஸ்களும், 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 740 பஸ்களும், 5-ந்தேதி (சனிக்கிழமை) 880 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3-ந் தேதி வியாழக்கிழமை 210 பஸ்களும், 4-ந் தேதி வெள்ளிக்கிழமை 115 பஸ்களும், 5-ந் தேதி சனிக்கிழமை 115 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரம்

மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி முதல் 5-ந் தேதி வரை தலா 95 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.