தமிழ்நாடு செய்திகள்

பள்ளிக்கூட வகுப்பறை சுவரில் அவதூறு வாசகங்கள் எழுதிய 4 மாணவர்கள் கைது

பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசாரும், கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் உள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்களை எழுதியிருந்தனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு சுவரில் எழுதப்பட்ட அவதூறு வாசகங்களை அழித்தனர். பின்னர் பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் 4 மாணவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்கள் எழுதிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.