தமிழக செய்திகள்

ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 37.88 சதவீதம் அதிகரிப்பு- திருப்பூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

உலகளாவிய நாடுகளில் இருந்து நம் நாட்டின் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. பஞ்சு, நூல் விலை குறைந்து வருகிறது. டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.

திருப்பூர்:

நடப்பு நிதியாண்டில் (2022-23) ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் உலக சந்தைக்கு மொத்தம் ரூ.34,663.84 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25,139.89 கோடியாக இருந்தது. இதன் மூலம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டை விட 37.88 சதவீதம் அதிகரித்துள்ளது. இது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

சீன எதிர்ப்பு அலையால் அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகளாவிய நாடுகளில் இருந்து நம் நாட்டின் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. நூல் விலை மற்றும் இதர மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெளிநாட்டு வர்த்தகர்கள் கடந்த 1½ ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றுமதி ஆடைகளுக்கு விலை உயர்வு அளித்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 37.88 சதவீதமும், டாலரில் கணக்கிடும்போது, 32 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பஞ்சு, நூல் விலை குறைந்து வருகிறது. டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் நிலவுவதால் அடுத்தடுத்த மாதங்கள் பிரகாசமாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT