தமிழக செய்திகள்

30-வது ஆண்டு முக்தி அடைந்த தினம்: சங்கர மடத்தில் மகாபெரியவருக்கு சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேசரய்யர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம்:

காஞ்சி மகா பெரியவர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 30-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி காஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள ஸ்ரீ மடம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மடத்தில் உள்ள மகா பெரியவரின் அனுஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது.

முன்னதாக இன்று அதிகாலை 5 மணிமுதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் போன்று இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு பாடினர். அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேசரய்யர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT