திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேஷ்(வயது30) என்பவர் சம்பளம் பேசி அழைத்து வந்திருந்ததாக தெரிகிறது. அவர் மொத்தமாக சம்பளத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சிலருக்கு ரூ.20 ஆயிரம்வரை சம்பள பணத்தை ராஜேஷ் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராஜேசிடம் சம்பளம் பாக்கி கேட்டு தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாள நிஷாத் (20) சச்சின் ( 20 ) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.