தமிழக செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது ஏன்?- சபாநாயகரிடம் மீண்டும் விளக்கம் அளித்த 3 முன்னாள் MLAs

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்திருப்பதாக அ.தி.மு.க குற்றச்சாட்டி வருகிறது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் த.வெ.க. கட்சியில் இணைந்து வருகின்றனர். மதுராந்தகத்தை சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரத்தை சேர்ந்த சத்யபாமா, பெருந்துறையை சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மே 25-ந்தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

அதன் பிறகு அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மறுநாள் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து விராலிமலை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.

குதிரை பேரம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததில் குதிரை பேரம் நடந்திருப்பதாக அ.தி.மு.க குற்றச்சாட்டி வருகிறது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விளக்கம்

இந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மேற்கண்ட எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசுக்கு ஏற்கனவே மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்திருந்தனர். அந்த விளக்கத்தில் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால் மீண்டும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து இன்று மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் இன்று தலைமைச் செயலகம் சென்று சபாநாயகரை சந்தித்து இரண்டாவது முறையாக விளக்கம் அளித்துள்ளனர்.