நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பலர் டெபாசிட் இழந்ததற்கு எடப்பாடி பழனிசாமியே முக்கிய காரணம் என சிவி சண்முகம் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்கவேண்டும் எனவும் சிவி சண்முகம் தரப்பு கோரிவருகிறது. இதனிடையே இன்று இபிஎஸ்-ன் எதிர்ப்பையும் மீறி, தவெகவிற்கு சட்டமன்றத்தில் ஆதரவு அளித்தது.
இந்நிலையில் தவெகவிற்கு ஆதரவாக வாக்கு செலுத்திய எம்.எல்.ஏக்கள் சிலர் உட்பட, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நீக்குதலில் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணா ரெட்டி, அருண்மொழித்தேவன், சுகுமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் எம்பிக்கள் ஜக்கையன், ராமலிங்கம், குமார் உள்ளிட்டோர் அடங்குவர்.