தமிழக செய்திகள்

சென்னையில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சென்னை, கீழ்பாக்கம், சி.எஸ்.ஐ. லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடக்கிறது.கிறிஸ்தவப் பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது.

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. புரட்சித் தலைவி அம்மா கிறிஸ்தவப் பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.

அம்மாவைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில், சென்னை, கீழ்பாக்கம், சி.எஸ்.ஐ. லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவப் பெருமக்களும், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.