தமிழக செய்திகள்

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள்... நாகர்கோவில் காசியின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்!

இளம்பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூலை. 14) உறுதி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் காசியின் மடிக்கணினியில் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதத்தில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இது தவிர, கந்துவட்டி மற்றும் மிரட்டல் வழக்குகளிலும் இவருக்கு தனித்தனியாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறி வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.

அதேசமயம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT