தமிழக செய்திகள்

சென்னையில் 1,869 விநாயகர் சிலைகள் கரைப்பு

4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.