தமிழக செய்திகள்

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 17 மணி நேரம் நடந்த வருமான வரி சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின

செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

திருவள்ளூர்:

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வட சென்னை பகுதியிலேயே அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் அலுவலகமாக செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வருகிறது.

செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் பத்திர பதிவு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்று பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இதில் பத்திரபதிவு அலுவலகத்தில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை காரணமாக செங்குன்றம் பகுதியில் விடிய விடிய பரபரப்பு நிலவியது.

இதே போன்று தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT