தமிழக செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் தீக்குளிக்க முயற்சி

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

கே.வி.குப்பம் அடுத்த மகமது புரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், முரளி, உத்திரகுமார்.

இவர்களது 3 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் திடீரென தயாராக கொண்டு வந்த மண் எண்ணெய் உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கிராம குளத்திற்கும் எங்களது நிலத்திற்கு செல்ல பொது வழி உள்ளது. பொது வழியை முருகம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி உள்ளார். விவசாய நிலத்திற்கு செல்லும் போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்க முயற்சி செய்கிறார்.

இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.