தமிழக செய்திகள்

அமோனியா கசிந்து 11 பேர் பலி - தனியார் நிறுவனத்தை மூட சிறப்பு குழு பரிந்துரை

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று முன்தினம் வரை 9 வடமாநில பெண் தொழிலாளர்கள் பலியானார்கள். அவர்களில் 5 பேரின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி சுபாசி ஜூவாங்ஸ் (வயது 24) என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆனது.

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. சுமார் 63 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை தொடர்ந்து புனித பீட்டர் பால் கடல் உணவு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு குழு ஆய்வு நடத்தியது.

ஆய்வை தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், புனித பீட்டர் பால் கடல் உணவு நிறுவனத்தை நிரந்தமாக மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது.