மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி குப்பிநாயக்கன்பட்டி மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் காத்தப்பன் (வயது41). இவர் கொடுவிலார்பட்டி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மகள் மதுமிதா (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது தாய் தனது மகளிடம் தேர்வு எப்படி எழுதினாய் என கேட்டுள்ளார். அதற்கு மதுமிதா ஏதோ எழுதி உள்ளேன் என சலிப்பாக கூறி விட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தாய் கேட்பதற்கு சரியான பதில் அளிக்கமாட்டாயா? என அவரை கண்டித்துள்ளார்.
அதன்பிறகு தனது அறைக்கு சென்ற மதுமிதா உள்புறமாக தாழிட்டுக் கொண்டார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அவரது தாய் கதவை தட்டினார். இதனால் அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மதுமிதா மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து அவரை போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காத்தப்பன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.