பேராவூரணி:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மனோரா நினைவுச் சின்னம் முன்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.தொடர்ந்து புதுப்பட்டினம் கடற்கரையில் புகழ்பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மெய்யன், மெய்யால் மணற் சிற்பங்கள் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
மேலும் படகு மூலம் புதுப்பட்டினம் கடலில் சென்று மீனவர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் அலுவலர்கள் படகில் ஏறி கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை பிடித்தபடி சென்று மீனவர்களிடம் தேர்தலில் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக் ராஜா, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், தனித் துணை ஆட்சியர் சௌமியா, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன் மற்றும் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம், மனோரா, கேர் காலனி, சின்ன மனை, புதுப்பட்டினம் மீனவர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மனோரா நினைவு சின்னம் முன்பாக அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.