தமிழ்நாடு செய்திகள்

குமாரபாளையத்தில் பரபரப்பு தெருநாய்கள் 10 பேரை கடித்து குதறியது

காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

மாலை மலர்

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.