தஞ்சாவூர்:
பாரதீய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1952-ம் ஆண்டு இந்தியை பொது மொழியாக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் இந்தி மொழி தெரியாது என்பதால் அப்போதைய பிரதமர் நேரு தமிழ்நாட்டில் இந்தி தெரிந்த பின்னரே அதனை அமல்படுத்துவோம் என்றார். அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் இந்தி தெரியவில்லை என கூறுவது ஏற்புடைதல்ல.
இந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது விரோத கருத்துக்களை பேசி வருகிறார்கள். நீட் தேர்வில் தமிழ் நாட்டிற்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பது வெட்ககேடானது. பின் தங்கிய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் நீட் தேர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.அங்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயர் அதிகாரிகளாக பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயம்.கல்வித் துறை அமைச்சர் கல்வித் துறையில் கொண்டு வந்த மாற்றமானது மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் அளவில் இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி ஜனாதிபதி தேர்தலுக்கு அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அமித்ஷாவும் ஆதரவு கேட்டார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. இதனை பிற கட்சிகளை கொச்சைப்படுத்த கூடாது. தமிழக மக்கள் உடனடியாக தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. அ.தி.மு.க. அரசுக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதால் அதுவே நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.