சென்னை:
இலங்கை அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்கின்றனர். ஆனால், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 108 மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 165 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும்.
இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை கருத்தில் கொண்டே இலங்கை அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #EedapadiPalanisamy #Letter #Modi #tamilnews