செய்திகள்

இரட்டை இலை தனித்தனி இலையாக ஆகிவிடக்கூடாது: தமிழிசை ஆதங்கம்

அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினையால் இரட்டை இலையை தனித்தனி இலையாக ஆக்கி விடக்கூடாது என்று தமிழக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மாலை மலர்

அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

5 வருடமும் அ.தி.மு.க. ஆட்சி நடத்த வேண்டும் என்றுதான் மக்கள் வாக்கு அளித்து இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கம் 5 வருடம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் விருப்பம்.

ஆனால் கட்சியில் ஏற்படும் குழப்பம் ஆட்சியில் பிரதிபலிக்கும். ஆட்சியில் குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் கருத்து தெரிவித்தோம்.

அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை இருந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்காது என்று நினைக்க தோன்றுகிறது. இரட்டை இலையை மீண்டும் பெற்று இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்கட்சி பிரச்சினையால் இரட்டை இலையை தனித்தனி இலையாக ஆக்கி விடக்கூடாது.

திரை உலகத்துறையினர் மட்டும் மாற்றத்தை தனிப்பட்ட முறையில் கொண்டுவர முடியாது.

மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறவர்கள் பா.ஜனதாவுடன் இணைந்து மாற்றத்தை கொண்டு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.