செய்திகள்

ஆர்.கே. நகர் தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது பற்றி 2 நாளில் முடிவு: தமிழிசை சவுந்தரராஜன்

ஆர்.கே. நகர் தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது பற்றி 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மாலை மலர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிட்டார். கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பா.ஜனதா போட்டியிடுமா? கங்கை அமரனே களம் இறக்கப்படுவாரா? என்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இப்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது, யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது பற்றி கட்சியின் தேர்தல் பணிக்குழுதான் முடிவு செய்யும்.

இதுபற்றி ஆலோசனை நடத்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும்.

பல தேர்தல்களில் முக்கிய கட்சிகளே தயங்கிய போது நாங்கள் துணிச்சலாக போட்டியிட்டு எங்கள் பலத்தை காட்டி இருக்கிறோம்.

ஆர்.கே.நகரில் கடந்த முறை நடந்ததுபோல் அல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே குற்றம் குறைகள் களையப்பட்டு முழு கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. எனவே வாக்குவங்கியை பெற இரட்டை இலை சின்னம் பெற்றுள்ள அணியோடு கூட்டணி அமைக்கும். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். பின்னணியில் பா.ஜனதா செயல்படுகிறது என்று திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார்.

இரட்டை இலை சின்னம் பா.ஜனதா வாங்கி கொடுத்தது என்று சின்ன பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்.

முதலில் அவரது கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும். அதன்பிறகு மற்ற கட்சிகளை பற்றி யோசித்தால் நல்லது. குஜராத்தில் டெல்லிமேல் சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் தேர்தல் கமி‌ஷன் உத்தரவை பின்பற்றியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.