செய்திகள்

ஆர்.கே.நகர் பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை - எச்.ராஜா பெயர்கள் பரிசீலனை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் மற்றும் எச்.ராஜா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுமா அல்லது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக போட்டியிடுவதை தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் பா.ஜனதா போட்டியிடுவதே நல்லது என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து கட்சியின் உயர்மட்ட குழுவினர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த முறை இசையமைப்பாளர் கங்கைஅமரன் நிறுத்தப்பட்டார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

தி.மு.க., அ.தி.மு.க., தினகரன் அணி கடுமையாக மோதுவதால் அதே அளவுக்கு பலம் வாய்ந்த பிரபலமான வேட்பாளரை களம் இறக்க பா.ஜனதாவும் ஆலோசித்து வருகிறது.

அதன் அடிப்படையில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை, எச்.ராஜா மற்றும் ஆர்.கே. நகர் தொகுதியைச் சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகிய மூவரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தேர்தல் மிகப்பெரிய சவாலாக இருப்பதால் தேர்தல் கமி‌ஷன் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.