செய்திகள்

இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்தாது: தமிழருவி மணியன் பேட்டி

அ.தி.மு.க. அரசு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தாது என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

மாலை மலர்

கும்பகோணம்:

கும்பகோணம் அரசு கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை நடத்த இன்று கால நிர்ணயம் செய்திருப்பது உச்சநீதிமன்றம்தான். அ.தி.மு.க. அரசு எப்படியாவது இரட்டை இலை சின்னம் பெற்றால்தான் வாக்காளர்களிடம் சென்று சேரமுடியும் என்பதால், இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் தமிழக அரசு நடத்தாது. எப்படியாவது முயன்று உச்சநீதி மன்றத்திற்கு சென்று, காலநீட்டிப்புக்கு தான் முயற்சிப்பார்கள், இந்த தேர்தலை தள்ளி போடுவதற்குதான் பார்ப்பார்கள்.

மக்களை விரைவாக சந்தித்து உள்ளாட்சி அமைப்புகளை சீர்படுத்தி, அவை செவ்வனே செயல் படவேண்டும் என்ற நிலையில், எந்த முடிவிற்கும் வரமாட்டார்கள். தேர்தலை சந்திக்கக்கூடிய திராணி தற்போதைய அரசுக்கு இல்லை, எப்படியாவது தள்ளி வைப்பதற்கும், தவிர்ப்பதற்கும் தான் முயற்சிப்பார்கள் .

நீட் பிரச்சனையில், மாணவர்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவசர சட்டத்தை நிறைவேற்றுவதாக நடித்து மாணவர்களை ஏமாற்று வதைத்தான் செய்தனர்.

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.