திருச்சி:
இந்திய குடியரசு கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பட்ஜெட்டில் பெரும் வருவாயாக டாஸ்மாக் வருவாயை சொல்லியிருக்கிறார்கள். சாராயத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம்கோடி வருமானம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது. இந்த வருவாய் 20,000 கோடி நலிந்த ஏழை மக்களின் உழைப்பும் ஊதியமும் ஆகும். ஆனால் இந்த வருவாயைக்கொண்டு அந்த மக்களுக்கு எந்த சிறப்பு திட்டமும் அறிவிக்கப்பட வில்லை .
நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கடனால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தனி நபர் மீதும் ஒரு லட்சத்து நான்காயிரம் கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. முதல்வராகி நான்காண்டு காலம் ஆன பின்னர் இப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனை சட்டமாகஇயற்றினால் மட்டுமே சாதனையாக இருக்கும். தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம்பரவி வருகிறது . இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாண்டிச்சேரி, கேரளா மாநிலங்கள் போன்று தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக யாரும் நீதிமன்றங்களுக்கு செல்லாதவகையில் அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இட ஒதுக்கீட்டை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தங்க ராஜ், மாநில பொருளாளர் நாகராஜன், திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.