செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: விஜயேந்திரருக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் தொடர்பாக விஜயேந்திரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நீதிபடி வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சென்னை:

ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் எஸ்.துரைசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை ராயப்பேட்டையில் கடந்த ஜனவரி 23-ந் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டபோது, அந்த பாடலை அவமதிக்கும் விதமாக விஜயேந்திரர் எழுந்து நிற்காமல், தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக உட்கார்ந்து இருந்தார். இவரது செயல், தேசதுரோக குற்றமாகும். எனவே, விஜயேந்திரர் மீது தேசதுரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பிளனேடு போலீசில் நான் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்பவம் ராயப்பேட்டையில் நடந்ததால், புகாரை ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிளனேடு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அதேபோல, விஜயேந்திரரின் கருத்தை இந்த கோர்ட்டு கேட்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.  #tamilnews

SCROLL FOR NEXT