செய்திகள்

புதுவையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

புதுவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நெடுங்காலமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

தமிழகத்தில் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக உள்ளது.

தமிழக அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த பாடலை பாடியே தொடங்கப்படும். இதே போல் புதுவையில் பாரதிதாசன் எழுதிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’! என்ற பாடல் உள்ளது.

புதுவை அரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் பாடப்பட்டே தொடங்குகிறது. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் புதுவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் பல உள்ளது. புதுவை மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் தன்னாட்சி நிறுவனம், கேந்திர வித்யாலயா, நவோதயா பள்ளிகள், கொசு கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் என 10-க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இதில் புதுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, நாடகத்துறை உள்ளிட்ட சில துறைகளில் மட்டுமே நிகழ்ச்சிகள், விழாக்களின் போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் இதர துறைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை.

இதே போல பிற மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை. அதற்கு பதிலாகவோ ஏதாவது பாடல்கள் பாடப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் நேற்றைய தினம் நடந்த அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. அதற்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் மகா கணபதி பாடல் பாடப்பட்டது.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.