கொலை 
செய்திகள்

மதுரையில் காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை

மதுரையில் காதல் திருமணம் செய்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனியாபுரம்:

மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 33). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வெல்டிங் வேலை செய்து வந்தார்.

முத்துக்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

வழக்கமாக காலையில் வேலைக்கு செல்லும் முத்துக்குமார் மாலை 7 மணிக்கு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.

ஆனால் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் முத்துக்குமார் வீட்டிற்கு வரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்து. இதையடுத்து மனைவி அபிராமி மற்றும் உறவினர்கள் முத்துக்குமாரை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள முட்புதரில் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முட்புதரில் முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. முகமும் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தன.

உடனே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துக்குமார் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்

வேலைக்கு சென்ற தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

SCROLL FOR NEXT