கைது 
செய்திகள்

சுசீந்திரம் அருகே பள்ளி-வீட்டில் திருடிய வாலிபர் கைது

சுசீந்திரம் அருகே பள்ளி மற்றும் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு உதவிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

சுசீந்திரம் அருகே குளத்தூர் பகுதியில் வீட்டை உடைத்து லேப்டாப் திருடப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இடலாக்குடி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் அறையை உடைத்து அங்குள்ள கம்ப்யூட்டர் ஒன்றை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் இரு இடங்களிலும் கைவரிசை காட்டியவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர், குளத்தூரை சேர்ந்த ராஜகுமாரன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியில் கைவரிசை காட்டியதாக தெரிவித்தார். நண்பர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.