கைது 
செய்திகள்

நிலக்கோட்டை அருகே போலீசாரை கட்டையால் தாக்கிய வாலிபர்கள் கைது

தென்னை மட்டை மற்றும் கட்டைகளால் போலீசாரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விருவீடு செக்போஸ்ட் உள்ளது. இந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

அவர் வந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு மீது மோதியது. உடனே போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அவர்கள் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

மோதல் முற்றவே அந்த 3 வாலிபர்களும் திடீரென அருகில் பந்தலில் இருந்த தென்னை மட்டை மற்றும் கட்டைகளால் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.

அதில் ஒரு வாலிபர் போலீசாரை எட்டி உதைத்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் 3 வாலிபர்களும் கட்டையால் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் வியாபாரி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல் அருகே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.