விஷம் 
செய்திகள்

கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

புதுக்கோட்டை அருகே கந்து வட்டிக்கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி அம்மாபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சையது அபுதாகிர். இவரது மனைவி பவுஷியா பேகம் (வயது 38). இந்த தம்பதியர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 18 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிதி நிறுவனத்தை அந்தோணியார்புரத்தை சேர்ந்த லியோ லாரன்ஸ் நடத்தி வருகிறார். கடன்பெற்ற அபுதாகிர் மாதந்தோறும் தவணைமுறையில் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தி வந்தார்.

கொரோனாவின் 2-வது அலை தாக்கத்தால் கடந்த 8 மாதங்களாக அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிதிநிறுவன அதிபர் லியோலாரன்ஸ் சையது அபுதாகிரின் வீடு தேடிச் சென்றார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பவுஷியா பேகத்திற்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பவுஷியா பேகம் மனமுடைந்து திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். கணவர் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் பவுஷியா பேகம் இன்று (சனிக்கிழமை) காலை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சையது அபுதாகிர் மணல்மேல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் அந்தோணியார்புரத்தை சேர்ந்த கந்துவட்டிக்காரர் லியோ லாரன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

SCROLL FOR NEXT