நாகர்கோவில்:
தக்கலை அருகே மயிலோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்தாமஸ் (வயது 58). இவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த விசாரணை நடத்தினர்.
ஜாண் தாமசுக்கு மயிலோடு பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. அதனை 4 வழி சாலைக்காக அரசு கையகப்படுத்தியதாகவும், அதற்கான முழு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார், முறையாக கலெக்டரிடம் மனு அளிக்கும்படி அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.