கடத்தல் 
செய்திகள்

மனைவி- மகனை கடத்தியதாக தொழிலாளி புகார்

ஏலகிரி மலையில் மனைவி, மகனை கடததியதாக டிரைவர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, நகை, பணத்துடன் கணவன் ஓடிவிட்டதாக அவருடைய மனைவியும் போலீசில் புகார் செய்துள்ளார்.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை பள்ளக்கணியூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது35). கூலித்தொழிலாளி. இவருக்கு சோபியா (23) என்ற மனைவியும, 3 வயதில் மவுலீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் சோபியாவுக்கும், அத்தனாவூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரவீந்திரன் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி ஊர்பஞ்சாயத்து நடைபெற்றதாகவும் தெரிகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சோபியா தனது மூன்று வயது மகனுடன் நேற்று முன்தினம் அதிகாலை கணவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேகமடைந்த ரவி இதுகுறித்து ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சோபியாவையும், மகனையும் ரவீந்திரன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

இதே போன்று டிரைவர் ரவீந்திரனின் மனைவி சங்கீதா தனது கணவர், வீட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சம், 7 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு சோபியா என்பவருடன் சென்று விட்டதாகவும், இதனால் தனது கணவர் ரவீந்திரனை கண்டுபிடித்து தரும்படியும் புகார் அளித்தார்.

இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் ஏலகிரி மலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.