திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொலை நடந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடை விற்பனையாளருக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடை அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் இரவு நேரத்தில் மதுபோதையில் வரும் நபர்கள் வீடுகளின் கதவை தட்டி பொதுமக்களுக்கு பெரும் இடையூறு செய்து வருகிறார்கள். இந்த மதுக்கடை அருகே தொடர்ந்து குற்ற செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மதுக்கடையை மூட வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் சதீஷ்குமார் தலைமையில் 300 பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையை உடனடியாக மூட வேண்டும் என பெண்கள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், மேற்பார்வையாளர் அழகுராஜ், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், ஜோஸ்பின் சிசாரா, வருவாய் ஆய்வாளர் மஞ்சு ஆகியோர் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வருகிற 5-ந் தேதிக்கு பிறகு கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.