தற்கொலை 
செய்திகள்

ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஈரோட்டில் பணத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் கண்ணதாசன் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி ஜீவா (வயது 49). இவர் ஈரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து, சுப்பிரமணியம் என்பவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்ததில் சிலர் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஜீவாவுக்கும், சுப்பிரமணியத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஜீவா நேற்று முன்தினம் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.