தற்கொலை செய்த மகாலட்சுமி 
செய்திகள்

கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் தற்கொலை

நீண்ட நேரமாக காதலியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் மகாலட்சுமியுடன் தங்கி இருக்கும் அவரது தோழிக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார்.

கோவை:

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கஞ்சம்பமடியை சேர்ந்தவர் ராம்அழகு. இவரது மகள் மகாலட்சுமி (வயது 25). கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் கோவை புறநகர அதிரடிப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

மகாலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே படைப்பிரிவில் வேலை பார்த்து வரும் நெல்லையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மகாலட்சுமி தனது செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு படுக்கை அறைக்கு சென்றார்.

அங்கு இருந்த மகாலட்சுமி காதலனுடன் ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக காதலியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் மகாலட்சுமியுடன் தங்கி இருக்கும் அவரது தோழிக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார். இதனையடுத்து அவர் மகாலட்சுமியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தற்கொலை கொலை செய்து கொண்ட மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.