ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் மன்னார். இவரது மனைவி சாந்தி (வயது 30). கடந்த 22-ந்தேதி சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்றபோது தடுக்கி கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனடியாக அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார்.
பின்னர் அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சாந்தி தடுக்கி விழுந்து இறக்கவில்லை என்பதும், அடித்துக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. கடந்த 22-ந்தேதி இரவு மன்னார் குடித்துவிட்டு சாந்தியை அடித்துள்ளார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து மன்னாரை கைது செய்தனர்.