காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர பகுதியில் உள்ள மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலக அறை வாயிலில் 5-ம் தூண் அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் உதவி கலெக்டர் விஜயா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்கள் வழங்கிய மனுவில், கோவில்பட்டி நகரில் வசிக்கும் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த 47 பேருக்கு இலவச வீட்டுமனை கேட்டு கடந்த 2017-ம் ஆண்டு மனு வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த மே மாதம் தங்களிடம் மனு அளித்தோம். அதன் பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுவை பெற்றுக் கொண்டு உதவி கலெக்டர், தகுதி உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.